ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மாகாண ப்ரீமியர்கள், பெண்களுக்கான அமைச்சர்களை ஒன்றிணைத்து நடைபெற்ற 2 நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.
ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றிவந்த Brittany Higgins, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்தது.
அதேநேரம் மத்திய அரசின் தரப்பில் மாநாட்டில் பங்கேற்று தங்கள் வாதங்களை முன்வைத்த அட்டார்னி ஜெனரல் உள்ளிட்ட பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த உரிய தீர்வுகளையும், பிரச்சனைகள் குறித்தும் பேசவில்லை என்று மாநாட்டில் பங்கேற்ற பெண் ஆளுமைகள் வருத்தம் தெரிவித்தனர். இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த மாநாடு ஒரு பக்கச்சார்பான நிகழ்வாக மாறிப் போனதாகவும், ஆண்கள் அனைவரும் பெண்களை தங்களுக்கு சொந்தமான பொருளாக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அது முற்றிலும் தவறான எண்ணம் என்றும் குறிப்பிட்டார். Brittany Higgins விவகாரத்தை காமன்வெல்த் சரியாக கையாளவில்லை என்றும் அதனை அடிப்படையாகக் கொண்டே பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு பெண்களுக்கான பொருளாதார உரிமை அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் காமன்வெல்த் பல்வேறு செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று விக்டோரியாவின் பெண்களுக்கான அமைச்சர் Gabrielle Williams கூறியுள்ளார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் வெறும் வார்த்தைகள் மட்டுமே போதாது என்றும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து அட்டார்னி ஜெனரல் Shannon Fentiman தெரிவித்துள்ளார். பெண்கள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகள் புகார்களை மத்திய அரசு செவி மடுத்து கேட்க வேண்டும் என்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பெண்கள் உரிமைகள் குறித்து மிக அதிக அளவில் பேசப்படாமல் அரசியல் ரீதியான மோதலோடு 2 நாள் உச்சி மாநாடு நிறைவு பெற்றதாக பெண் ஆளுமைகள் தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
Link Source: https://ab.co/2Vp8w2p