தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஆந்தோனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவிக்கு வந்தது முதல் முந்தைய ஸ்காட் மோரீசன் தலைமையிலான அரசாங்கத்தின் போது நடந்த முறைகேடுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் ஸ்காட் மோரீசன் பிரதமராக இருந்தபோது ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. அந்த காலக் கட்டத்தில் சுகாதாரம், நிதி மற்றும் வளத்துறை அமைச்சகங்களை தன்னை இணை அமைச்சராக சேர்த்துக் கொண்டார். இதற்கு ஆளுநர் டேவிட் ஹர்லியும் ஒப்புதல் வழங்கி கையொப்பம் போட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்பு விதி 64-ன் படி இந்த நடைமுறை செல்லும். ஆனால் குறிப்பிட்ட இலாக்காவை நிர்வாகம் செய்து வரும் அமைச்சர்களுக்கு, அது தெரியப்படுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காரணமாக மோரிசனின் கூட்டு நிலைப்பாட்டிற்கு அப்போதைய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் ஒப்புக்கொண்டார் என்று தெரியவந்துள்ளது. எனினும், அப்போதைய அரசாங்கத்தில் நிதித்துறை கவனித்து வந்த மத்தியாஸ் கார்மனுக்கும், வளத்துறையை கவனித்து வந்த கெயித் பிட்டுக்கும் இக்கூட்டு நிலைபாடு குறித்து அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு தெரியாமலேயே கொரோனா காலக்கட்டத்தில் நிதித்துறை மற்றும் வளத்துறையை அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரீசன் கவனித்து வந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஸ்காட் மோரீசன் பிரதமராக இருந்த போது ஆஸ்திரேலிய மக்கள் இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிர்வாக சிக்கல் காரணமாகவே நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது கடுமையான குற்றச்சாட்டு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. விரைவில் இதுகுறித்து என்னுடைய அரசாங்கம் விசாரணை நடத்தும் என்றார்.
இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் டேவிட் ஹர்லி, மற்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது கிடையாது. அப்படி செய்வதற்கு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்பது இல்லை. பிரதமரின் ஆலோசனையின் பேரில் தான் இம்முடிவு மேற்கொள்ளபட்டது. கூடுதல் துறைகளை நிர்வகிப்பதற்கான நியமனங்களை வெளியிடுவது என்பது அரசாங்கத்தின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.