ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரீசன் ஆட்சிக்காலத்தில் அவர் நிதித்துறை, உள்துறை, வளத்துறை உள்ளிட்ட முக்கிய நான்கு அமைச்சரவையில் கூடுதலாக அங்கம் வகித்துள்ளார். ஆனால் இதுகுறித்து ஆஸ்திரேலிய மக்களிடம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்நிலையில் சிட்னி 2ஜி.பி ரேடியாவுக்கு முன்னாள் பிரதமர் மோரீசன் பேட்டியளித்தார். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உக்ரைன் – ரஷ்யா என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.அப்போது அவரிடம் பிரதமர் அல்பானீஸ் தெரிவித்த குற்றச்சாட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மோரீசன், சில சமயங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்ததையும், நாம் கையாண்ட சூழ்நிலையையும் மறந்து விடுவதை பரவலாக பார்க்க முடிகிறது. அது மிகவும் வழக்கத்திற்கு மாறான நேரமாக இருந்தது. அதுபோன்ற சூழ்நிலையை எப்போதும் எதிர்கொண்டதில்லை. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் நன்மையை கருதியே கொண்டுவரப்பட்டது.
கூடுதல் துறையை கவனித்து வந்தாலும், துறை சார்ந்த அமைச்சர்கள் தான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். என் நிலையில் இருந்து துறைகள் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றிருந்தால், கூடுதல் அமைச்சரவை நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கும் என்று ஸ்காட் மோரீசன் கூறினார்.