அடிலேய்டிலுள்ள விங்ஃப்லீடு பகுதியில் காரில் ஜெயின் சோமர்வில்லே (35) என்கிற பெண் தனது 2 மகன்களுடன் சென்றுகொண்டிருந்தார். நெடுஞ்சாலையோரமாக வாகனத்தை நிறுத்திய அவர், தனது 3 வயதான ஒரு மகனையும் 8 வயதான மற்றொரு மகனையும் கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜெயினை தடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
அதையடுத்து அவர் அடிலேய்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயினின் மனநிலையை ஆய்வு செய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பருக்கு ஒத்திவைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளர் செலினா டின்னிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயின் செய்யவிருந்த கொடூரத்தை தடுத்த பொதுமக்களுக்கு முதற்கட்டமாக நன்றி கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், படுகாயமடைந்துள்ள ஜெயினின் இரண்டு மகன்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதற்கான ஜெயின் தனது மகன்களை கத்தியால் குத்தினார் என்பது குரித்து தெரியவில்லை. இதை குடும்ப பிரச்னையாகவும் கருத முடியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள ஜெயின் சோமர்வில்லே காணாமல் போனவராக அறிவிக்கப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருடைய மனநிலை தொடர்பான சிகிச்சை முடிந்தவுடன் அடுத்தக்கட்ட விசாரணை நடவடிக்கைகளை அறிவிப்போம் என்று கண்காணிப்பாளர் டின்னிங் தெரிவித்தார்.