ஃபிளோரிடாவிலுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ‘மாரா லாகோ’ இல்லத்தில் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. அணுவாயுதங்கள் தொடர்பான ஆவணங்கள் டிரம்பின் வீட்டில் இருந்தனவா என்பதை கண்டறியும் விதத்தில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு காரணமாக அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒருவரின் வீடு சோதனையிடப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். இது டிரம்பின் ஆதரவாளர்களை மிகவும் கொதிப்படையச் செய்துள்ளது. இந்த சோதனையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்நிலையில், மத்திய புலனாய்வுத் துறை நடத்திய சோதனைக்கு நீதிபதி பிறப்பித்த உத்தரவை வெளியிடுமாறு அமெரிக்க நீதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் தலைமைச் சட்ட அதிகாரி மெரிக் கார்லேண்டு, டிரம்ப் வீட்டில் சோதனை நடத்த தானே முன்வந்து அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் டிரம்ப் 2021ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகையில் சட்டத்துக்கு புறம்பாக, நீதித்துறை ரகசியமானவை என்று வகைப்படுத்திய சில ஆவணங்களை அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டிரம்பின் ஃபிளோரிடா வீடு சோதனை செய்யப்பட்டதாக சட்ட அதிகாரி மெரிக் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் இச்சோதனையின் மூலம் முக்கிய சில ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுதொடர்பான தகவல்களை விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவுள்ளதாகவும் அதிகாரி மெரிக் கார்லேண்டு கூறியுள்ளார். இதனால் அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.