ஆஸ்திரேலியாவில் அவசர உதவி எண் “000” செயல்பாட்டில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஆபத்து தருணத்தில் இருப்பவர்களும், அவசர உதவி தேவைப்படுபவர்களும் இந்த எண்ணை தொடர்பு கொள்வர். ஆனால் ஒரு சில தருணங்களில் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் நபர்கள், தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை அவசர உதவி மைய அதிகாரிகளுக்கு தெரிவிக்க முடியாமல் தடுமாற்றம் அடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிராமப்புறங்களில் பயணிக்கும் போதும், விபத்துகளில் சிக்கும் தருணங்களில் தங்களின் இருப்பிடத்தை தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை அவசர உதவி தொலைப்பேசி சேவை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மே 12 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்தொழில்நுட்பமானது 000 என்ற எண்ணுக்கு அழைப்பவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய உதவுகிறது.
புவி இடங்காட்டி, வைபை, தொலைபேசி அலைவரிசை போன்றவற்றை பயன்படுத்தி அழைப்பாளரின் இருப்பிடத்தை இத்தொழில்நுட்பம் கண்டறிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவசர உதவி சேவை பிரிவின் செயல் இயக்குனர் சாரா ரீனர், இது ஒரு அற்புதமான தொழில்நுட்பம் என்று பாராட்டியுள்ளார்.
அண்மையில் விக்டோரியாவின் கிராம பகுதியில் நடந்த விபத்தில் சிக்கியவர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்த போது, தங்கள் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவிக்க அவர்கள் தடுமாறியதாகவும், இத்தொழில்நுட்பத்தால் உடனடியாக அவர்களுக்கு உதவமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
50 மீட்டர் துல்லியத்துடன் இந்த தொழில்நுட்பம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆண்டிராய்ட் இயங்க்குதளத்தின் 4.1 பதிப்பை உள்ளடக்கிய செல்போன்களிலும், அதற்கு மேற்பட்ட இயங்கு தளங்களிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆப்பிள் இயங்கு தளங்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3f0rza3