ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசிக்கெதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி வீடியோக்களும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் பதிவேற்றப்பட்டு வந்தது. இது மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வந்தது.
தடுப்பூசிகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆஸ்திரேலிய அரசால் வலியுறத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் யூடியுபில் பதிவேற்றப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கெதிரான வீடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக தவறான தகவல்கள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்த யூ டியூப், தற்போது தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்களுக்கும் தடைவிதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மலட்டு தன்மை ஏற்படும், குழந்தைகளுக்கு செலுத்தப்படும் அம்மை தடுப்பூசிகளால் அவர்களுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடங்கிய வீடியோக்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தடுப்பூசி எதிர்பாளர்களான ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் மற்றும் ஜோசம் மெர்கோல ஆகியோரின் யூடியூப் பக்கங்கள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ டியூப் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள கென்னடி, ஜனநாயக நாட்டில் மக்களின் உடல் நலன் குறித்து பேசுவதற்கு கருத்து தடை விதிப்பது ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று கோவிட் குறித்து தவறான செய்தி வெளியிட்டதாக ரஷ்ய தொலைக்காட்சி பக்கத்தை யூ டியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு ரஷ்ய நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/2ZBi0sX