கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய நாள் முடிவில் ஆளுங்கட்சியான லிப்ரல் கட்சியை தோற்கடித்து, எதிர்க்கட்சியான லேபர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து ஆண்டனி அல்பேனிஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார்.
ஆஸ்திரேலியாவில் ஆட்சியமைக்க தேவையான மொத்த இடங்கள் 76. ஆனால் லேபர் கட்சிக்கும் வெறும் 74 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மேலும் 2 இடங்கள் தேவை என்கிற நிலையில், தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் லிப்ரல் மற்றும் லேபர் கட்சிகளுக்கிடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் டாஸ்மானியாவின் லையான்ஸ் தொகுதி இழுபறியில் இருந்து வந்தது. தற்போது இதனுடைய முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி லிப்ரல் கட்சியின் சூஸி பவரை வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து லேபர் கட்சியின் பிரையன் மிச்சேல் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 76 இடங்களில் 75 இடங்களில் லேபர் கட்சி வெற்றி பெற்றுவிட்டது. மேலும் நான்கு தொகுதிகள் இழுபறியில் இருந்து வருகிறது. எனினும் விக்டோரியாவின் மெக்னாமாரா தொகுதியில் லேபர் கட்சி முன்னிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.