பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பயணிகளுக்கான உரிய சேவைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று விமான நிலையங்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஜூலை மாத தொடக்கத்தில் விடுமுறை நாட்கள் வரவுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் சுற்றுலாவுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக மாநில எல்லைகளுக்கிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் பல்வேறு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வேலையைவிட்டு நிறுத்திவிட்டன.
தற்போது மீண்டும் பழையநிலை திரும்பியுள்ளதை அடுத்து, விமானப் போக்குவரத்து சீரடைந்து வருகிறது. உள்நாட்டு பயணம் முதல் வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பல்வேறு மக்கள் தினசரி விமான நிலையங்களுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கான சேவைகள் கிடைப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கு குறைந்தளவிலான ஊழியர்கள் பணியில் இருப்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சிட்னி விமான நிலையத்தில் கொரோனா பரவல் காரணமாக 15 ஆயிரம் பேர் வேலையைவிட்டு நீக்கப்பட்டனர். இப்போதும் மீண்டும் பயணிகள் அதிகளவில் வந்துபோகும் நிலையில், அவர்களை முறையாக கவனிக்கவும் வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கும் ஆட்களில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய சிட்னி விமான நிலையத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜியோப் கல்பர்ட், ஊழியர்களை மீண்டும் வேலைக்கு நியமனம் செய்யும் பணிகள் துரித கதியில் நடந்து வருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அதை ஜூன் மற்றும் ஜூலை மாத காலத்திற்குள் செய்து முடிப்பது கடினம் என்று தெரிவித்தவர், அடுத்த 12 மாதங்கள் நிலைமை இப்படியே தொடரும் என்றார். மேலும் ஜூலை மாத விடுமுறை நாட்களை முன்னிட்டு பலரும் சுற்றுலா செல்வது வழக்கம். அப்போது சிட்னி விமான நிலையம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும். அதை சமாளிப்பது பெரும் சவலாக அமையப்போகிறது என்று தலைமைச் செயல் அதிகாரி ஜியோப் கல்பர்ட் கூறினார்