உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் டாலருக்கு நிகரான அந்தந்த நாட்டின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் இதேநிலை தொடர்கிறது. இதன்காரணமாக சந்தைப் பொருட்கள், அத்தியாவசப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. சாமானியர்கள் இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் குறைந்தப்பட்ச ஊதிய நிர்ணயம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக இருந்தது. தொழிலாளர் கட்சி ஆட்சி பொறுப்பேற்றதும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியாவில் புதிய அரசு ஆட்சியமைத்துள்ள நிலையில், நிதி குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது. அதன்படி குறைந்தப்பட்ச ஊதியத் தொகை 5.2 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு மணிநேரத்துக்கு 20.33 டாலராக ஊதிய நிர்ணயம் இனி 21.38 டாலர்களாக வழங்கப்படும். இதன்மூலம் குறிப்பிட்ட தொழிலாளரின் வார வருமானம் 869.60 டாலராக அமையும். இந்த புதிய ஊதிய கொள்கை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிதிக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். குறைந்தப்பட்ச ஊதியம் பெறுவர்கள் தான் கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றினர். அவர்களுக்கு5.2 சதவீத ஊதிய உயர்வு பெரும் உதவியாக இருக்கும். இதனால் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.