கோவிட் 19 தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வந்ததாகவும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை சுகாதாரத்துறை பலமடங்கு வேகத்தில் மேற்கொண்டதன் விளைவாக 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்ற மைல்கல்லை விக்டோரியா மாகாணம் அடைந்துள்ளது. இதனை அடுத்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் அறிவித்துள்ளார்.
ஓட்டல், உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்வதற்கான தடைகள் நீக்கப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடும் தளர்த்தப்படுகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் கூறியுள்ளார்.
தேசிய அளவிலான பாதுகாப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும், இதன் மூலம் ஒரு விக்டோரிய குடிமகனாக மிகவும் பெருமைப்படுவதாக டேனியல் ஆன்ட்ருஸ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் பிரைமரி பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்ற நிகழ்வுகளில் 30 ஆயிரம் பேர் வரை பங்கேற்கலாம் என்றும், குத்துச்சண்டை டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளதன் பேரில் அதனை நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. கோடைக்கால கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது மிகப்பெரும் சாதனை என்று ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ருஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் விதிகளிலும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 14 நாட்களுக்கு பதிலாக இனி 10 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதுமானது. தொற்றுப்பரவல் தொடர்பு குறித்த விவரங்கள் இனி வெளியிடப்படாது. வீடுகளில் உள்ளவருக்கு தொற்று பாதித்தால் தடுப்பூசி செலுத்தாத பட்சத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். பணியிடங்கள், பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொற்று பாதித்தால் அவர்களோடு தொடர்புடையவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3FtZSkC