தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ.,க்கும் மேல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பின் படி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து வருவதால், கரையை கடக்கும் திசையில் மாறுபாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்று இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும், எந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறதோ அங்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும்,விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வசிக்கும் மக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பால், காய்கறி, போன்ற அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
Link Source: https://bit.ly/3DwLfMx