ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக, அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் போரில் ஈடுபட்டு வந்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உட்பட, நேட்டோ படையை சேர்ந்த வீரர்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தாலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கனில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க ராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கன் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கன் அரசை காக்கும் திறன் அந்நாட்டு ராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கனில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் படைகள் பல முக்கிய ராணுவ நிலைகளில் இருந்து வெளியேறுவதால், அந்த இடங்களை கைப்பற்ற தாலிபான் படைகள் முனைப்பு காட்டுகின்றன.
மேலும் பல இடங்களில் தாலிபான்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Link Source: https://bit.ly/3hB2dRm