சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பது தொடர்பான முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுப் பரவல், பருவநிலை மாற்றம் வர்த்தக கொள்கைகள் தைவான் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பதற்றமான சூழலை ஏற்படுத்தி இருந்த நிலையில், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் காணொளி வாயிலாக உச்சி மாநாட்டை நடத்தினார்கள்.
அப்போது இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பின்னரே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தூதரக ரீதியாக அமெரிக்கா பங்கேற்காது என்கிற முடிவை அறிவித்துள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பங்கேற்றாலும் அதிகாரிகள் யாரும் சீனாவிற்கு செல்ல மாட்டார்கள் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு வாரங்களில் அதிபர் ஜோ பைடன் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்தால் அது இரு நாடுகள் இடையிலான உறவை சீர்குலைக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் இது மற்ற உலகத் தலைவர்களுக்கும் அழுத்தத்தை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் ரீதியாக தூண்டிவிடும் முயற்சி என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Zhao Lijian தெரிவித்துள்ளார். இந்நேரத்தில் இந்த விவகாரத்தில் சீனாவின் பதிலடி என்னவாக இருக்கும் என்கிற விரிவான விவரத்தை கூற Zhao Lijian மறுத்து உள்ளார்.
அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவும் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இயலாது என்றும், இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இந்த முடிவை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் பூதாகரமாக ஆக்கப்படுகிறது என்றும் இது ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதற்கு சாதகமாக அமையும் என்றும் Zhao Lijian கூறியுள்ளார். அதே நேரத்தில் அதுபோன்ற நிலையை அமெரிக்கா ஏற்படுத்துமே ஆனால் உரிய பதிலடி கொடுப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Zhao Lijian திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சீனா விவகாரத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், குறிப்பாக தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் அணுகுமுறை பெய்ஜிங் உடனான உறவில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் இதன் காரணமாக அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கான விசா கட்டுப்பாடு விதிக்கப்படும் சூழல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/31EClPo