கடந்த 2020-ம் ஆண்டு விக்டோரியா மாநிலம் ரேவன்ஹால் பகுதியிலுள்ள டேமி ஃபைலிஸ் ஃபிராஸ்ட் பெண்கள் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த வெரோனிகா நெல்சன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். உடலை பிணக்கூராய்வு செய்து பார்த்தபோது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதை பொருள் பயன்பாடு திடீரென நிறுத்தப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் பெண்ணின் இறப்புக்கு காரணம் என்று தெரியவந்தது.
மனதளவில் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய இருந்த வெரோனிகாவுக்கு சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரும் பரிவு காட்டவில்லை. அதன்காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், விக்டோரியா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வெரினோகா உடலை பிணக்கூராய்வு செய்த மருத்துவர்கள் குழு நீதிமன்றம் முன்பு தோன்றி சாட்சியம் அளித்தனர். அதில், மனவேதனை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு வில்கி குறைபாடு என்கிற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் என்ன சாப்பிட்டாலும் வாந்தி எடுத்து வந்துள்ளார். மேலும் சிறையில் அவருக்கு போதை பொருட்கள் கிடைக்காததாலும் தொடர்ந்து வெரோனிகாவின் உடல்நிலை மோசமாகி வந்துள்ளது.
ஒருவேளை அவருடைய உடல்நிலையை அறிந்து சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர் என்றால், அவர் காப்பாற்றப்பட்டு இருப்பார். ஆனால் சிறையில் அவர் கண்ணியமாக நடத்தப்படவில்லை. முடிவில் இறந்தும் விட்டார் என்று மருத்துவர் குழுவினர் கூறியுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கில் சாட்சியம் அளித்த தடயவியல் நோயியல் நிபுணர் யெலினா பாபர், இதே தகவலை கூறியிருந்தார். இதன்காரணமாக வெரோனிகா சிறையில் மரணமடைந்த வழக்கில், மருத்துவர்களின் சாட்சியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.