வரும் 20-ம் தேதி ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. முன்னதாக லிப்ரல் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களை கவர்ந்தது.
இதனால் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் வாக்குறுதிகள் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பின. அந்த வகையில் தொழிலாளர் கட்சியின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அடுத்த 4 ஆண்டுக்கான செலவீனங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தால், 7.4 பில்லியன் செலவில் வளர்ச்சிப் பணிகள், மேம்பாட்டு வேலைகள் அனைத்தும் செய்யப்படும். குறிப்பாக குழந்தைகள் நலனுக்கான சேமிப்பு, பயிற்சி மற்றும் கல்வித்துறைக்கான முதலீடு, அனைவருக்கும் எரிவாயு கிடைக்கும் வகையிலான தேவைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆஸ்திரேலியாவின் துவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தொழிலாளர் கட்சி நிமிரச் செய்யும். இதன்மூலம் இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ள ஒரு ட்ரில்லியன் டாலர் கடனை அடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.