தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.
234 தொகுதிகளில் 233 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 74 இடங்களை பிடித்துள்ளது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி சூடியுள்ளது.
அதிமுக கூட்டணியில், அதிமுக 63 இடங்களிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
முதல்முறையாக சட்டமன்ற தேர்தல் கண்ட மக்கள் நீதி மய்யம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வென்றுள்ளது.
6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்ள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட ஈஸ்வரனுக்கும் வெற்றி கிடைத்துள்ளது.
அதிமுகவில் போட்டியிட்ட 28 அமைச்சர்களில் 11 பேர் தோல்வியடைந்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், சி.வி.சண்முகம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி
உட்பட முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும் தோல்வியை தழுவியுள்ளனர்.
திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் போன்றவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பதவியேற்பு மிக எளிமையான முறையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/3vCC8pr