நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75,378 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 177 நபர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று 236 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், மாகாண மக்களுக்கு வலு சேர்க்கும் விதமாக பூஸ்டர் தடுப்பூசி விநியோகத்தை நவம்பர் 1 முதல் தொடங்க மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாத காலத்தை பூர்த்தி செய்தவர்கள் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பைசர் தவிர வேறு நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்திகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனை, மருந்தகம், பொது மருத்துவமனை, தடுப்பூசி முகாம்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 18 வயது கடந்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டாலும், 12 வயதை கடந்த நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கும் பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கிடைக்கும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் Brad Hazzard, கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் சரியான பாதையில் செல்ல மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனாவில் இருந்து நிச்சயம் மீள்வோம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய தளர்வுகளின் படி வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: shorturl.at/eEU26