மெக்சிகோ, பியூப்லோ நகர் அருகே அமைந்துள்ள San Pablo Xochimehuacan பகுதியில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், படுகாயமடைந்த 54 பேரில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூப்லோ நகரின் ஆளுநர் Miguel Barbosa எரிவாயு கசிவு குறித்து சுமார் 80 நிமிடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையால் சுமார் 2000க்கும் அதிகமான பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு முதல் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், தொடர்ந்து 3 முறை வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் 54 வீடுகள் சேதமடைந்துள்ளது.
அப்பகுதியில் மருத்துவமனியில் இருந்த 37 நோயாளிகளும் விபத்துக்கு முன்பே வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக ஆளுநர் Miguel Barbosa தெரிவித்துள்ளார். எரிவாயு குழாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருளை திருட முயன்றதே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருளை கொண்டு செல்லும் பெரிய குழாய்களில் ஒரு சிலர் உடைப்பை ஏற்படுத்தி திருடுவது மெக்சிகோவில் அன்றாடம் தொடர்கதையாகியுள்ளது. இது போன்ற திருட்டுகளால் தினசரி 4000 பேரல் எரிபொருள் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பியூப்லோ ஆளுநர் Miguel Barbosa தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மெக்சிக்கோவின் Tlahuelilpan நகரில் ஏற்பட்ட எரிவாயுக்குழாய் வெடிப்பில் 139 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
Link Source: shorturl.at/iqFH4