நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது வரை 6 நபர்களுக்கு ஒமிக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் துபாய், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியா திரும்பியவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர், பிராட் ஹசார்ட், இன்னொரு ஊரடங்கு பிறப்பிப்பதை தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தோகாவில் இருந்து சிட்னி திரும்பிய 40 வயது நபர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு லேசான அறிகுறி தென்படத்தொடங்கியது. இவர் மற்ற பயணிகளுடன் விமானத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் பயணம் செய்த விமானத்தில் வந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு முன்வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மரபணு பரிசோதனையில் அவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் இருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. அந்த நபர் சில இடங்களுக்கு சென்றதாகவும், அதனால் சுகாதாரத்துறையின் அறிவிப்பை பொதுமக்கள் கவனிக்குமாறு தெரிவித்துள்ளது.
மேலும் அண்மையில் தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்டதால், அந்த நாட்டில் இருந்து கடந்த 2 வாரங்களில் ஆஸ்திரேலிய திரும்பியவர்களின் மாதிரிகளை மறு பரிசோதனைக்கு உட்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே 300 மாதிரிகளை மறு பரிசோதனைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிமீயர் டோமினிக் பெரோடெட் தெரிவிக்கையில் ஒமிக்ரான் வகை வைரஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டாலும், ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 15 ஆம் தேதி வழங்க திட்டமிட்டிருந்த தளர்வுகள் திட்டமிட்டபடி வழங்கப்படும் என்றும் பிரிமீயர் டோமினிக் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வகை வைரஸை கட்டுப்படுத்துவதில் அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது வரை 16 வயதை கடந்தவர்களுக்கு 92.5% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/31oUEaN