ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பான்மையான மாகாணங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட், நவம்பர் 8ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், ஆஸ்திரேலிய தடுப்பூசி தொழில்நுட்ப குழு ஒப்புதல் கிடைத்த பிறகு இது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாத காலம் நிறைவடைந்தவர்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
வெளிநாடு செல்வதற்கு அல்லது வெளிநாட்டில் இருந்து வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி அவசியம் என்பது கிடையாது என்றும் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலே போதுமானது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவது வரவேற்கத்தக்கது ஒன்று என்றும் ஏனென்றால் மோசமான உடல் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் என்றும் ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் இது பரிந்துரைக்க தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னுரிமை பட்டியலை விரைவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட வாய்ப்புள்ளது. பைசர் பூஸ்டர் தடுப்பூசி போதிய அளவு கையொருப்பு உள்ளதால், அனைவருக்கும் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3nIeMwf