இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவில் உள்ள அமைச்சர்கள், நீதிபதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று பலர் உளவு பார்க்கப்பட்டதாக பிரான்ஸை சேர்ந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்தியாவில் இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்ற கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், இவ்விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், தொடர்ந்து 2வது நாளாக மக்களவை முடங்கியது.
பெகாசஸ் ஒட்டுக் கேட்பு மென்பொருள் மூலம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரத்தை கிளப்பினர். வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும் நிலையில், ஒன்றிய அரசோ உளவு பார்ப்பதில் தீவிரமாக இருந்துள்ளது’ என பதாகைகளில் எழுதி அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், அவை தொடங்கி 5 நிமிடத்தில் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வலியுறுத்தியும் உறுப்பினர்கள் அமைதி அடையவில்லை. இதனால் அடுத்தடுத்து பல முறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதே போல், மாநிலங்களவையிலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது. கேள்வி நேரத்தை தொடங்க துணைத் தலைவர் ஹரிவன்ஸ் முயன்ற போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால், பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 1 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாள் முழுவதுமாக முடங்கிய நிலையில், 2வது நாளும் மக்களவையில் அலுவல்கள் நடக்கவில்லை. இன்று பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து, வியாழக்கிழமை மீண்டும் கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: shorturl.at/ruwG0