தெற்கு ஆஸ்திரேலியாவில் தற்போது 12 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் 40 வயதான நபர் ஒருவருக்கு தென்னாபிரிக்க வகை கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மருத்துவ விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இவரின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து ராயல் அடிலைட் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொது சுகாதாரத்துறை அதிகாரி Michael Cusack, இந்த நபர் தென்ஆப்ரிக்க வகை வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Tom Court மருத்துவ விடுதியில் இருந்த இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அவர் Royals Adelaide மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அவருக்கு அதிதீவிர பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்டிருப்பது தற்காலிக சுவாசப் பிரச்சனையா, அல்லது நுரையீரல் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிள்ளதா என்பதை மருத்துவமனை தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் இதுவரைக்கும் 659 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 145 பேருக்கு கோவிட் தடுப்பூசி என்பது செலுத்தப்பட்டுள்ளது.
Australia Medical Association மாநில தலைவர் Chris Moy பேசிய போது நம் நாட்டிற்கு கோவிட் அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்
கடுமையான கட்டுப்பாடுக்கு மத்தியிலும் இந்த வைரஸ் தொற்று பரவி வருவது தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது கண்டறியப்பட்டு கூடிய புதிய வகை தென்னாபிரிக்க வகையான வைரஸ் விரைவில் பரவக்கூடிய வகையிலும், உடல்நிலையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கியிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் கோவிட் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் .
குளிர் காலம் வர இருப்பதால் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் குளிர்காலத்தில் ஐரோப்பாவில் கோவிட் தாக்கம் அதிகரித்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.