ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டவுள்ளது.
மெல்போர்னை சேர்ந்த 44 வயது நபருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாலும் அவருக்கு ரத்த உறைதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அண்மையில் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt ஆஸ்திரேலிய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பும், மருத்துவ பொருட்கள் நிர்வாகத்துறையின் நிபுணர்கள், AstraZeneca தடுப்பூசி பாதுகாப்பானது என்று உறுதியளித்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதேநேரம் மெல்போர்ன் நபருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப் படுவதற்கு முன்பு கடுமையான சோதனைகளுக்கு தடுப்பூசி உட்படுத்தப்பட்டதாகவும் Hunt தெரிவித்திருக்கிறார் .
மக்களுக்கு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருந்தால், அவர்களுடைய பொது மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம் என்றும் Hunt தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் நாடுகளிடமிருந்து ஏப்ரல் மாத இறுதிக்குள் 40 லட்சம் தடுப்பூசிகளை பெரும் முயற்சியிலும் தொழிலாளர் கட்சி ஈடுபட்டுள்ளது.
மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹன்ட் பேசும்போது தடுப்பூசி செலுத்தக்கூடிய எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகவும் தற்போது வரைக்கும் 8 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று ஒரே நாளில் 79 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மெல்போர்னில் உற்பத்தி செய்யப்படக்கூடிய தடுப்பூசியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் தேவைக்கேற்ப அது விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் .
சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் எப்போது முடிவடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹன்ட் தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்கட்சி அமைச்சர் Mark Butler ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளும் உரிமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூத்த குடிமக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதாகவும் ஆனால் இதில் அவர்கள் தோல்வி அடைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்
அதேநேரத்தில் மாநிலங்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணிகளை சிறப்பாக செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரேலியாவில் ஒரு நாளில் கண்டறியப்படும் தொற்று எண்ணிக்கை மிகக் குறைவு என்றும், அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாக நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் இதுவரைக்கும் 15 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.