ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் பதிவாகி வருகிறது. பல மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதே வைரஸ் பரவலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார பணியிடங்கள், பொது போக்குவரத்து துறைகளை தவிர வேறு எங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இல்லை.
இந்நிலையில் தெற்கு ஆஸ்திரேலியாவில் 4 நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு 3000 கடந்து பதிவாகி வருகிறது. இதுதொடர்பாக தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் நிக்கோலா ஸ்ப்ரூரியரிடம், பல்கலைக்கழக மாணவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிட வேண்டும் என்று முதல்வர் பீட்டர் மலினாஸ்காஸ் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை முதல்வர் பீட்டர் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், முகக்கவசம் கட்டாயமாக அணியவேண்டும் என்று கூறுவதற்கும் மக்களை முகக்கவசம் அணிய ஊக்குவிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பிட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஆலோசனைகளை மட்டுமே வழங்குகிறது. அதுதொடர்பாக அந்தந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்று முதல்வர் பீட்டர் மலினாஸ்காஸ் தெரிவித்துள்ளார்.