பசிபிக் நாட்டு தீவான டாங்கோவில் கடந்த ஜனவரி 15-ம் தேதி, கடலுக்கு அடியில் இருந்த எரிமலை திடீரென வெடித்தது. இதனால் அந்நாடு பலத்த சேதத்தை சந்திக்க நேர்ந்தது. நாடு முழுவதும் சாம்பல் புகை மூட்டம் உருவாகி பெருமளவில் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி, பொருட்கள் கிடைப்பதில் சிக்கில் உள்ளிட்ட பிரச்னைகள் டாங்கோவில் தலைதூக்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிகளை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியா நாட்டின் ஹெச்.எம்.ஏ.எஸ் அடிலேய்டு என்கிற ராணுவக் கப்பல், டாங்கோ நாட்டின் கடற்கரையில் முகாமிட்டுள்ளது. மருத்துவ பொருட்கள், உணவு பொருட்கள், உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் உபகரணங்கள் ஆகியவை ஹெலிகாப்டர் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ராணுவக் கப்பலுக்குள் இருந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாங்கோ நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. தற்போது, இதன் காரணமாக அந்நாட்டுக்குள் கொரோனா பதற்றம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் மாரீஸ் பைய்ன், பொருட்கள் வழங்கப்படும் போது எந்தவிதமான மனித தொடர்பும் ஏற்படுத்தப்படமாட்டாது என்று கூறியுள்ளார். டாங்கோ நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் சையா பியுகலா பேசுகையில், சரக்குகளை இறக்கிவிட்டு துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டுவிடும். கடலுக்குள் கப்பல் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3nYYFeE