பஹாமாஸ்-ல் இருந்து ப்ளோரிடாவுக்கு வந்த கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 39 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. அந்த கப்பல் மனித கடத்தலுக்கு பயன்படுத்தியதாகவும், கப்பலில் தொங்கிக் கொண்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணியில் தொடர்ந்து அமெரிக்க கடற்படை ஈடுபட்டுள்ளது.
போர்ட் பியர்ஸில் இருந்து 72 கடல் மைல் தொலைவில் படகில் சிக்கி தவித்த நபர் மீட்கப்பட்ட நிலையில், காணமால் போன எவரும் உயிர் காக்கும் கவச உடையான லைப் ஜாக்கெட் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடலோர காவல்படை மற்றும் கடற்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
39 பேரும் பிமினி தீவு பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் பயணித்த படகு மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கி கவிழ்ந்ததாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட ஒரு நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிமினி தொடங்கி போர்ட் பியர்ஸ் வரையிலான 218 கிலோ மீட்டர் தொலைவு வரை ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும், இது மனிதக்கடத்தல் சம்பவம் தான் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
ஹைதி, பிமினி, டொமினிக், பஹாமஸ், க்யூபா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அகதிகளாக கடல் வழியாக அமெரிக்கா செல்வது சமீப நாட்களில் அதிகரித்து வருவதாகவும், தொடர்ந்து அமெரிக்க கடற்படை நடத்தி வரும் சோதனையில் ஹைதியை சேர்ந்த 88 பேர் பிடிபட்டுள்ளனர்.
ஒரே கப்பலில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றி வந்த கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இதே போன்று க்யூபாவில் இருந்து வந்த கப்பல் ஒன்றில் 22 பேர் வந்த நிலையில் 9 பேர் அதில் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான இது போன்ற நடவடிக்கைகளில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சட்டவிரோத நுழைவுகளில் ஈடுபட முயற்சி செய்வோருக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3KJsA4t