விக்டோரியாவில் சமூகப்பரவல் மூலமாக மேலும் 16 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மேலும் நீட்டிக்கப் படுவதாக டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
டெல்டா வகை வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான பணியாக இருப்பதாகவும் ப்ரீமியர் கூறியுள்ளார். மேலும் தற்போது நீட்டிக்கப்படும் ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் அல்லது தளர்வுகள் குறித்து தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
புதிதாக தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.
அதேநேரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 15 ஆயிரத்து 800 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை தொற்றாளர்கள் சென்றுவந்த 250க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வைரஸ் பரவலின் வேகம் மிக அதிகமாக இருப்பதாகவும் தொடர்புகளை கண்காணிப்பதற்குள் புதிய தொற்றுகள் உறுதி செய்யப் படுவதாகவும் விக்டோரியா தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறியுள்ளார். தொற்று பரவல் இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் தலைமை சுகாதார அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான விரிவான விபரங்கள் விக்டோரிய சுகாதாரத்துறையின் சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விக்டோரியாவில் இருந்து குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மானியா உள்ளிட்ட பகுதிகளுக்கான பயண போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3hS2uQd