ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா உள்ளிட்ட பல்வேறு மகாகாணங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. மருத்துவக் கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தை உருவாக்கி உள்ள இந்த சூழலில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதே வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.
ஒரு வார காலத்தில் ஒரு லட்சம் பேரில் 815 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னரே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக ஆஸ்திரியா அறியப்படுகிறது. மேலும், இது போன்ற கட்டுப்டுகளை அரசு மேற்கொள்வது சாதாரணமானது என்றும் ஆனால் கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது என்றும் வேந்தர் Alexander Schallenberg கூறியுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கான கட்டுப்பாடுகளை தேசிய அளவில் அதிகரித்து ஆஸ்திரிய அரசு உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 பேருக்கு மேல் ஒன்று கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் இதுவரை 64 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தேசிய அளவில் அமல்படுத்துவதற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த கட்டுப்பாடுகள் 12 வயது முதல் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போரை வீட்டு விட்டு வெளியில் வராமல் தடுப்பதற்கு உதவும் என்றும், அத்தியாவசிய தேவைகள், வேலைக்குச் செல்வோர், தினசரி பொருட்களை வாங்கச் செல்வோர், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வோர் என அனைவரையும் கட்டுப்படுத்தும் என்றும் வேந்தர் Alexander Schallenberg தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டுப்பாடுகள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மற்றும் செலுத்தி கொள்ளாதவர்கள் இடையிலான தொடர்பை துண்டிக்க உதவும் என்றும், கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு ஆயிரத்து 450 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் ரோந்து செல்லும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து தகுதி உடைய நபர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Wolfgang Mueckstein கேட்டுக்கொண்டுள்ளார்.
Link Source: https://ab.co/3Hrmm7m