டிசம்பர் 21 தேதி முதல் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 72 மணிநேர தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும், மெல்போர்ன் மற்றும் சிட்னி வரும் சர்வதேச பயணிகள் வருகை தந்த 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெகட்டிவ் என முடிவுகள் வரும்வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்களுக்கும் இதே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும், சர்வதேச எல்லை விவகாரங்களில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து இரண்டு மாகாணங்களும் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தைப் பொறுத்தவரை சர்வதேச பயணிகள் வந்து ஆறாவது நாளில் மற்றும் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சிட்னியில் ஐந்து முதல் ஏழு நாட்களில் இரண்டாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு தொடங்கியது முதல் இரு நாடுகளும் தங்களது சர்வதேச எல்லை விவகாரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் மூன்று வாரங்களுக்கு பிறகு 72 மணிநேர கட்டாய தனிமைப்படுத்துதல் நடவடிக்கையில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஒமைக்ரான் தொற்று அதிகளவில் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்குமென்றும் நியூ சவுத் வேல்ஸ் ப்ரீமியர் Dominic Perrottet தெரிவித்துள்ளார்.
விக்டோரியாவில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புடன் வாழவும் அதேநேரத்தில் வரும் நாட்களில் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் ப்ரீமியர் Dominic Perrottet குறிப்பிட்டுள்ளார்.
Link Source: https://ab.co/32dACRl