Qantas விமான சேவை நிறுவனம் அவுட்சோர்சிங் முறையில் சுமார் இரண்டாயிரம் பணியாளர்களின் வேலைகளை வெளியில் இருந்து பெற்று வந்ததன் காரணமாக தன் நிறுவனத்தின் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஜூலை மாதத்தில் போக்குவரத்து பணியாளர்களின் சம்மேளனம் TWU சார்பில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் Qantas விமான சேவை நிறுவனம் சுமார் 2000 பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் அவுட்சோர்சிங் முறையில் பணிகளை மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முறையிடப்பட்டது.
அணிகளின் உடைமைகளை கையாளுதல் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட வேலைகளை விமான சேவை நிறுவனம் வெளியிலிருந்து பெற்றதன் காரணமாக நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை இழந்தனர். இதனையடுத்து பணியாளர்கள் சட்டத்தை நிறுவனம் மீறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நிலையில் Qantas விமான சேவை நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவில், பலமுறை தொடர்ந்து பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து வந்தது. கடந்த 9 மாதங்களாக 2 ஆயிரம் பேர் வேலை இழந்து தவித்து வரும் சூழலில் விமான சேவை நிறுவனம் விடாப்பிடியாக தனது முடிவில் உறுதியாக இருந்து வந்தது.
இந்நிலையில் பெடரல் நீதிமன்றம் போக்குவரத்து பணியாளர்கள் சம்மேளனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பணியாளர்களின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததன் காரணமாக விமான சேவை நிறுவனம் வேலைகளை பறித்ததாகவும் அதனை மீண்டும் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வேலையிழந்த ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அடுத்த ஆண்டுக்குள் விமான சேவை நிறுவனம் வழங்குவதற்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள சம்மேளனத்தின் தேசிய செயலாளர் Michael Kaine, ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அதனை நிறுவனம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழியர்களை அதிருப்தி அடைய வைத்திருப்பதாகவும், சட்டரீதியாக வேலையை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் மேலும் நிறுவனத்திடம் இருந்து கடந்த 9 மாதத்திற்கான இழப்பீட்டு தொகையை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் Michael Kaine தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் 20 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்து இருப்பதாகவும், இதன் காரணமாக 10 ஆயிரம் பணியாளர்கள் வரை வேலையில் இருந்து நீக்கிவிட்டு அவுட்சோர்சிங் முறையில் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் Qantas விமான சேவை நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.
Link Source: https://ab.co/3e31shK