இலங்கையைச் சேர்ந்த பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்தனர். கடந்த மார்ச் 2018-ம் ஆண்டு, அப்போதைய அரசாங்கம் அவர்களுடைய விசாவை காலாவதியாக்கியது. அதையடுத்து பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரையும் நாடுகடத்த ஆஸ்திரேலியா அரசாங்கம் முடிவு செய்தது. இதை எதிர்த்து தாக்கம் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் முயற்சிக்கு தடை விதித்தது. அதன் பின் பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு. கடந்தாண்டு முதல் அவர்கள் அனைவரும் பெர்த் நகருக்கு கொண்டுவரப்பட்டு சமூகக் காவலில் வைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, பிரியா – நடேசலிங்கம் குடும்பத்தினரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் தாங்கள் வசித்து வந்த பிலோலா நகருக்கு சென்றடைந்தனர்.
இந்நிலையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள பிலோலா மற்றும் கிளாடு ஸ்டோன் நகரங்களில் பல்லின பல்கலாசார மக்களை ஒன்றிணைக்கும் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களுடைய இரண்டு மகள்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ப்ரியா, பிலோலா சமூக மக்களுக்கு நன்றி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிலோலா மக்களுக்கு தனது குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும். எங்களுடைய வாழ்நாட்களை பிலோலா நகரின் முன்னேற்றுத்துக்கு அர்ப்பணிக்கவுள்ளோம். என்னுடைய குழந்தைகள் இப்போது மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கின்றனர். இந்த மண்ணுக்கு திரும்பிவந்தது, மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது என்று கூறினார்.