தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.
குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 1921 ஆம் ஆண்டு அன்று தொடங்கியது.
இதை நினைவு கூறும் விதமாக சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து சட்டமன்ற நூற்றாண்டு விழாவை தலைமை தாங்கி நடத்தி தரவும், சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் மதுரையில் கலைஞர் பெயரால் அமைய உள்ள நூலக அடிக்கல் நாட்டு விழா, சென்னை கிண்டியில் அமைய இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, நடத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இதற்காக, சபாநாயகர் அப்பாவு ஜனாதிபதியை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இதேபோல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக, விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்குள் நுழையும் அனைவரும் அடையாள அட்டை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுவர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணா நிதியின் திறப்பு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகம், தலைமை செயலகம் சாலை, போர் நினைவு சின்னம் ஆகியவை மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://bit.ly/3fmiloD