ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 16 ஆம் தேதி அதி வேகமாக பரவும் டெல்டா வகை பரவல் கண்டறியப்பட்டது. இப்பரவலை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளையும் மாகாண அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 210 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பால் சிட்னியை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இது வரை 70 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 120 பேருக்கு எவ்வாறு தொற்று பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வை தொடங்கியுள்ளனர். 11 பேர் தனிமைபடுத்துதல் இருந்த போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்படும் நபர்கள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சை பெற முன்வருவதில்லை என்று மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் பிரட் ஹசார்ட் தெரிவித்துள்ளார். தற்போது உயிரிழந்த ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும்,தற்போது அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் பிரட் தெரிவித்துள்ளார்.
பெரிய நிறுவனங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டாலும், சிறிய நிறுவனங்கள் தொற்று பரவுவதற்கு, காரணமாக அமைவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட்சா நிறுவன ஊழியர்கள் 11 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதோடு மன அழுத்தமும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மருத்துவமனையில் 53 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தொற்று பரவல் குறித்த தகவல் தெரிவிப்பதில்லை.
இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மக்கள் தொற்று பாதிக்கப்பட்டாலோ அல்லது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறித்தியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது வரை 3190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Link Source: https://ab.co/3rKrEU5