அணு சக்தி மூலமாக இயங்கக்கூடிய நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்பத்தை அக்கூஸ் புரிந்துணர்வு மூலமாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா பெறுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.
முதற்கட்டமாக இந்த ஒப்பந்தம் மூலமாக அணுசக்தி தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியா கடற்படைக்கு வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த நீர்மூழ்கி கப்பல்களில் எந்தவிதமான அணு ஆயுதம் இடம்பெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் ஆசிய பசிபிக் பிராந்திய பகுதிகளில் அணு நீர்மூழ்கி கப்பலை கொள்முதல் செய்வது என்பது பிராந்தியத்தில் அணு ஆயுத போட்டியை ஏற்படுத்தும் என்று வடகொரிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து முழுமையாக ஆராய்ந்து வருவதாகவும் வடகொரியாவின் பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் நிலவினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா- ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து தங்களுடைய தூதரக அதிகாரிகளை பிரான்ஸ் திரும்பபெற்றுள்ளது.
அமெரிக்கா சர்வதேச ஒப்பந்தத்தை மீற கூடிய வகையில் தொடர்ந்து நடந்து கொள்வதாகவும் பிரான்ஸ் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக பிரான்சுடன் மேற்கொள்ளப்பட்ட 90 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனையை நிறுத்தி வைத்துள்ள வடகொரியா அண்மைக்காலமாக குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத சோதனையை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Link Source: shorturl.at/nVW37