நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் இந்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடிப்படை மக்களின் வசதி மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் தயாராகியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நிதி அமைச்சர் மேட் கென், தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு வாய்ப்புகள், கல்வித்துறையில் மாறுதல் மற்றும் முதல்முறையாக சொந்த வீடு வாங்குவோருக்கான சிறப்பு சலுகைகள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்துறைகளில் பெண்கள் அதிகமானோர் ஈடுபடும் விதமாக 16.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வேலைக்கு பெண்கள் தடையின்றி செல்ல ஏதுவாக, அவர்களுடைய குழந்தைக்கான பராமரிப்புச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் கூடுதலாக குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அரசு நிறுவ உள்ளது. ஐ.வி.எஃப் சிகிச்சைகள், இறுதி மாதவிடாய் காலத்தின் போது தேவைப்படும் சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய மன ஆரோக்கியம் உள்ளிட்ட மகளிர் உடல்நலன் சார்ந்த சிகிச்சைகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளுடன், மாநிலம் முழுவதும் மேலும் புதிய பள்ளிகள் கட்டப்படும். தொடர்ந்து கல்வித்துறையில் 1.6 பில்லியன் டாலர் மதிப்புக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் 150 டாலர் மானியம் வழங்கப்படும்.
மழலையர் பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரத்தில் கல்வி பயில்வதற்கான நடவடிக்கை 2030-ம் கல்வியாண்டு முதல் மேற்கொள்ளப்படும். மேற்கு சிட்னியிலுள்ள 9 அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கு மேம்பாட்டு பணிகளுக்கு 200 மில்லியன் டாலர்கள் முதலீடுகளை ஈர்க்கும் விதமான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுரங்க வழியிலான சிட்னி மெட்ரோ வழித்தடத்துக்கு 12 பில்லியன் டாலர் ஒதுக்கபப்ட்டுள்ளது.
முதல்முறையாக சொந்தமாக வீடு வாங்குவோர் பத்திரப் பதவின் போது, இனி வீடு கட்டுவதற்கான மொத்த தொகைக்கும் வரி செலுத்த தேவையில்லை. அதற்கு பதிலாக அவர்கள் சொத்து வரி மட்டும் செலுத்தினால் போதும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியூ சவுத் வேல்ஸ் மாகாண பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.