நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், ஹண்டர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த Anthony Elfalak- கெல்லி தம்பதியினரின் 3 வயது மகன் AJ’ Elfalak. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஏ ஜெ, புட்டி பகுதியில் உள்ள வீட்டருகே கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காணாமல் போனார்.
அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த இந்த பகுதியில் சிறுவனை தேடும் பணியில் ஏராளமான தன்னார்வலர்களும், மாநில அவசர பிரிவை சேர்ந்தவர்களும், காவல்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகலாக தன்னார்வலர்களும் காவல்துறையினரும் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனுக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்ததால்,வனப்பகுதியில் சிறுவனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவியதால், பெற்றோரும், காவல்துறையினரும் கடும் சிரத்தையுடன் தேடுதல் பணியை தொடர்ந்து வந்தனர். 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் சிறுவன் குறித்த எந்த தடையமும் கிடைக்காதது பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் பெரும் ஏமாற்றமளித்தது.
சிறுவன் காணாமல் போன இடம் அடர் வனப்பகுதி மட்டுமல்லாமல், புதர்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், தன்னார்வலர்களும், மீட்பு படையும் மிகுந்த சிரமத்துடன் தேடுதல் பணியை தொடர்ந்து வந்தனர். தேடுதல் பணியில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
3 நாளின் போது, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிக்காப்டர், ஒரு குட்டை போன்ற பகுதியில் சிறு அசைவு தென்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து அசைவை கண்காணிக்க தொடங்கியது.
அதில் இருந்த மீட்பு படையை வீரர்கள், அப்போது சிறுவன் ஒருவன் தேங்கியிருந்த குட்டையில் தண்ணீரை கைகளால் அள்ளிக்குடிக்கும் காட்சியை கண்டுள்ளனர். உடனடியாக தேடுதல் பணியில் இருந்த வீரர்களுக்கு அந்த சிறுவனின் இருப்பிடம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளனர். 15 நிமிடத்துக்குள் சிறுவன் இருந்த இடத்திற்கு சென்ற மீட்பு குழு, அந்த சிறுவன் காணாமல் போன ஏ, ஜெ என்பதை உறுதி செய்தனர்.
சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட செய்தி அறிந்ததும், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஏ ஜேவின் பெற்றோரும் மீட்பு படையை சேர்ந்தவர்களும் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டனர்.
சிறுவன் காணாமல் போன இடத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 நாட்களாக சிறுவன் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்தால் ஓரளவு நலமுடன் இருந்ததாகவும், தேடுதல் குழு அவரை தேடத் தொடங்கிய தருணத்தில் அவர் குகையிலோ அல்லது பாறைகளின் கீழ் பகுதியிலோ தங்கியிருக்க வாய்ப்பிருப்பதாக டிடெக்டிவ் Brad Monk தெரிவித்துள்ளார். சிறுவனின் உடலில் கிழே விழுந்ததர்கான தடயங்களும், புதர்களாலும் ஏற்பட்ட சிராய்புகள் கண்டறியப்பட்டாலும், தங்களின் மகன் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஏ.ஜே வின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தங்களுடைய மகன் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று கூறும் அவரின் தாயார் கெல்லி, தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள ஏ, ஜெ வின் குடும்பத்தினர், பாரம்பரிய முறைப்படி வீட்டில் அனைவருக்கும் விருந்து வைப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3jQ6uSj