கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிக்கப்பட்டு குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து மத்திய அரசுக்கு கிடைத்து அவை முறையாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். அதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஒரு தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அலையின் முடிவதற்குள் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்திய அரசை சார்ந்திராமல் மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தன. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய முடிவெடுத்து இருந்தன. இந்நிலையில் மாடெர்னா மற்றும் ஃபைசர் நிறுவனங்கள் தங்களது கொள்கைப்படி இந்திய அரசுக்கு மட்டுமே நேரடியாக தடுப்பூசிகளை வழங்க முடியும் என்றும் மாநில அரசுகளுக்கும் தனி நபர்களுக்கோ நேரடியாக விற்பனை செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இங்கு தயாராகும் மருந்துகள் ரஷ்யாவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அனுமதி அளிக்கப்பட்ட பின் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் அளவு குறைவாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு சார்பில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாராகிவிடும் என்று உறுதியளித்தார். அதற்காக பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்கள் தீவிரமாக தடுப்பூசியை உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசி தொடர்பான மூடநம்பிக்கைகளை களைந்து மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட முன் வருவதற்கான விழிப்புணர்வுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை மே 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Link Source: https://bit.ly/3fdTJyx