ஆஸ்திரேலியாவில் சுகாதாரத்துறை தினந்தோறும் புதிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பரவல், வேறு நோய் தொற்று பாதிப்பு, அவசர மருத்துவம், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் ஆஸ்திரேலியாவின் மருத்துவத்துறை முற்றிலும் சீரழிந்தது. தொடர்ந்து இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. பல்வேறு மருத்துவமனைகளில் பணம் கொடுத்தும் மருத்துவம் பார்க்க ஆளில்லை. அவசர ஊர்தி கிடைப்பதில் நிலவும் சிரமம், உரிய சிகிச்சைகள் கிடைப்பதில் தாமதம், மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதில் போட்டி என அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு கூட மக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா முதல் அலை உருவான காலக்கட்டத்திலேயே மருத்துவர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேற தொடங்கினர். வேலையில் ஏற்பட்ட அழுத்தம், அதனால் ஏற்பட்ட மனநல பிரச்னைகள் போன்றவை அவர்களுடைய வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கடந்த பின்னும், இதேநிலை தான் தற்போது நீடிக்கிறது.
இதுதொடர்பாக ராயல் ஆஸ்திரேலிய கல்லூரி மேற்கொண்ட கள ஆய்வில், ஆஸ்திரேலியா முழுவதும் 87 சதவீத மருத்துவர்கள் பணிச்சுமையால் அவதி அடைந்து வருவதாக கூறுகிறது. இதனால் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக கள ஆய்வில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மருத்துவ கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ள மருத்துவர் சாரா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவசர மருத்துவம் துறையில் உள்ளார். தற்போது இதே துறையில் தலைசிறந்த வல்லுநராக திகழும் இவர், கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு ஒட்டுமொத்த மருத்துவ பணிகளும் மாறிவிட்டதாக கூறுகிறார். பணிச்சுமை காரணமாக மருத்துவர்கள் மனநல பாதிப்புக்கு ஆளாகுகின்றனர். மன அழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி தற்கொலை முடிவையும் அவர்கள் நாடுவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படுவது மற்றும் மருத்துவத்துறையில் நிலவும் பற்றாக்குறைகள் ஆகியவற்றை கலைவது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.