இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் பிறந்தநாளையொட்டி ஆஸ்திரேலியாவில் நீண்ட நாட்கள் விடுமுறை விடப்படும். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, மக்கள் பலர் விடுமுறை நாட்களை வீட்டிலேயே கழித்தனர்.
தற்போது ஆஸ்திரேலியாவில் பல்வேறு இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால் விடுமுறை நாட்களை கொண்டாட ஆர்வமுடன் பலரும் ஆயத்தமாகி வருகின்றனர். கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு முதன்முறையாக மெல்பேர்ன் விமான நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் 97,000 பயணிகள் விடுமுறை நாட்களை கொண்டாட சுற்றுலா செல்ல ஆயத்தமாகியுள்ளனர். இதனால் விமான நிலையங்களில் பயணிகள் தங்களுடைய விமானம் புறப்படுவதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்பே வந்துவிட வேண்டும் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு விமான நிறுவனங்களின் முனையங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. இதன் காரணமாகவும் இந்த அறிவுரைகளை அதிகாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். நடப்பு வார இறுதிநாட்களில் மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.