ஆஸ்திரேலியாவில் விவசாய துறையில் பெரும் நிறுவனமாக உள்ளது எம் & ஜி விசாரி. இந்நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விவசாய மெல்பேர்னில் அமைந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் குடிமகன் அல்லாத 9 பேர், அந்த இடத்தில் பண்ணை வேலையில் ஈடுபட்டு வருவதை கண்டுப்பிடித்தனர்.
தொழிலாளர்கள் அனைவரும் இந்தோனேஷியா, கம்போடியா, மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பலருக்கும் குறைந்தளவில் ஊதியம் வழங்கப்படுவதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதுதொடர்பான விசாரணை மெல்பேர்ன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதவர்களை பணியமர்த்தியதையும், குறிப்பிட்ட ஊழியர்களுக்கு குறைந்தளவில் ஊதியம் வழங்கியதையும் எம் & ஜி விசாரி நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் நீதிபதி வேரைய்டு இவ்வழக்கில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதை ஒப்புக்கொண்ட எம் & ஜி விசாரி நிறுவனத்தின் தலைவர் கியூஸ்ப்பே விசாரிக்கு 60 ஆயிரம் டாலர்கள் நீதிபதி அபராதம் விதித்தார். மேலும் வேற்று நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.