நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நாஜி கொடிகளை காட்டுவதை கிரிமினல் குற்றமாகும் வகையில் சட்டம் இயற்றுவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அது எந்தவிதமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. பொது இடங்கள், அருங்காட்சியகங்கள், பேரணி மற்றும் திரைப்படங்களில் நாஜி கொடிகளை காட்சிப்படுத்தினால் அதை எந்த வகையில் சட்ட ரீதியாக தடுக்கலாம் என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.
வலதுசாரி அமைப்புகளின் செயல்பாடுகள் மிகவும் தீவிரமடைந்து வரும் நிலையில் ஸ்வஸ்திகா சின்னத்தை தடை செய்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும் இது பல்வேறு தனிநபர்களின் போராட்டத்திற்கு காரணமாக அமையும் என்றும் என்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண துணை காவல் ஆணையர் Dave Hudson கூறியுள்ளார். தீவிர வலதுசாரி சிந்தனைகளோடு தனியாக இயங்கிக்கொண்டிருக்கும் நபர்களே சவாலாக இருப்பதாகவும், ஆஸ்திரேலியா முழுவதும் இயங்கும் குழுக்களை எளிதில் கையாள முடியும் என்றும் துணை ஆணையர் கூறியுள்ளார்.
நாஜி கொடிகளை பயன்படுத்துவதற்கு எதிராக உருவாக்கப்படும் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டக் கூறுகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் காவல் துறையினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தில் இதுபோன்ற புதிய சட்டங்கள் மூலமாகத்தான் அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை குறைக்க முடியும் என்றும், அதன் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றும் Dave Hudson தெரிவித்துள்ளார்.
சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தீவிர வலதுசாரி அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், ஓராண்டு கால கட்டத்தில் அவர்கள் ஆன்லைன் வாயிலாகவும் தங்களது செயல்பாடுகளை அதிகரித்து இருப்பதாகவும் காவல் துணை ஆணையர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் துப்பாக்கி மற்றும் ப்ளூ பிரிண்ட் உடன் கைது செய்யப்பட்ட நபரின் வீடுகளில் நாசி கொடிகள் வரையப்பட்டிருந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகளை புதிய சட்டம் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அரசுக்கு தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே ஸ்வஸ்திகா தடை செய்யப்பட்டுள்ள நிலையில் விக்டோரியா உள்ளிட்ட ஆஸ்திரேலிய மாகாணங்களிலும் அவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு தடை செய்யும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் புதிய சட்டம் இயற்றும் அதற்கான பாராளுமன்ற விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
Link Source: https://ab.co/3ooYXf8