பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் 6 மனித உரிமை அமைப்புகளை பயங்கரவாத குழுக்கள் என இஸ்ரேல் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பில் ஆஸ்திரேலிய அரசு இஸ்ரேலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதுடன், மனித உரிமை அமைப்புகளை பயங்கரவாத குழுக்களாக அறிவித்த தன்னிச்சையான முடிவை உடனடியாக திரும்ப பெற கோர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தை சேர்ந்த சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளை குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையிலும் அங்கு அமைதிக்குப் போராடி வரும் நபர்களை குறிவைத்து இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களால் பாலஸ்தீன மனித உரிமை ஆர்வலர்கள் படும் துயரத்தை ஆவணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்களை பயங்கரவாத குழுக்கள் என்று அடையாளப்படுத்துவது மூலமாக மிகப்பெரும் அபாயம் எதிர்வரும் காலங்களில் காத்திருப்பதாகவும், சிவல் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவிக்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள இந்த கடிதத்தில் ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. ஆஸ்திரேலிய வர்த்தக யூனியன் கவுன்சில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச மனித உரிமை வழக்கறிஞர்கள் அமைப்பு, சர்வதேச வளர்ச்சிக்கான கவுன்சில் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு தங்களது கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசுக்கு முன்வைத்துள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான விபரங்கள் தெரியாமல் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், அமைப்புகள் கூறியுள்ள கண்டனத்தை பதிவு செய்ய இயலாது என்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். இது தொடர்பான நேரடியான கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
Link Source: https://ab.co/3bbuz0R