கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி காலை 9 மணியளவில் விக்டோரியாவின் வடக்குப் பகுதியில் இருந்து உலுப்னா என்கிற இடத்துக்கு ஏர்பஸ் என்கிற நிறுவனத்துக்கு சொந்தமான உலங்கு வானூர்தி சென்றது. விமானி உட்பட 5 பேர் வானூர்தியில் பயணம் செய்தனர். வானில் பறந்த சில நிமிடங்களில் வானூர்தி காணவில்லை.
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் துவங்கின. அப்போது உலுப்னா பகுதிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள டிஸ்பாயின்மெண்ட் மலைதொடரில் உலங்கு வானூர்தியின் விபத்துக்குள்ளான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அதில் பயணித்த விமானி டீன் நீல் (32), பயணிகள் பால் ட்ரோஜா (73), லிண்டா வுட்ஃபோர்டு (50), ஐயன் பெர்ரி (59), நிக்கோலஸ் வாசுதேவா (53) உள்ளிட்டோர் விபத்தின் போது உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பயண பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
அதுதொடர்பான முதற்கட்ட தகவல்களை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். அதன்படி உலுப்னா பகுதிக்கு பறந்து சென்ற வானூர்தி விமானியின் கட்டுப்பாட்டை இழந்து டிஸ்பாயின்மெண்ட் மலைதொடரில் இருந்த உயரமான மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் விமானி உட்பட 5 பேர் உயிரிழந்ததையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளனர். வானூர்தியில் விபத்தில் சிக்க காரணமாக இருந்த மரம் 2500 அடி உயரம் கொண்டதாக இருந்துள்ளது. உலங்கு மோதியவுடன் மரம் முறிந்து விழுந்துள்ளது. விபத்துக்குள்ளான வானூர்தியில் எந்தவித கோளாறும் இல்லை என்று அதிகாரிகள் தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விக்டோரியாவை சோகத்தில் ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களிடம் பேசவும் அடுத்தக்கட்டமாக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.