மெல்பேர்னின் தென் – கிழக்கு திசையிலுள்ள ஊரகப் பகுதி சவுத் யார்ச். இங்குள்ள பண்டு சாலையில் தேவாலயம் ஒன்று உள்ளது. காலை 6.30 மணியளவில் திடீரென தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேவாலயத்தைச் சுற்றி ஒரு கி.மீ தூரத்திலுள்ள குடியிருப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எதிர்பார்க்கப்பட்டதை விடவும் தேவாலயத்தில் தீ விபத்து பயங்கரமாக இருந்தது. இதனால் வீரர்களின் பணி சவாலாக அமைந்தது. அங்கிருந்து தேவாலயத்துக்கு அருகாமையிலுள்ள கிறிஸ்ட் சர்ச் கிராமர் பள்ளிக்கும் தீ பரவியது. இதனால் சவுத் யார்ச் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. மொத்தம் 30 தீயணைப்பு வீரர்கள் களத்தில் போராடினர். அருகிலுள்ள மற்ற கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பின் பகுதி முழுவதும் தீக்கு இரையாகின.
மேலும் தேவாலயத்தை ஓட்டியுள்ள சர்ச் கிராமர் பள்ளிக்கும் தீ பரவியதை அடுத்து, அங்குள்ள மூன்று அறைகளும் முற்றிலும் எரிந்து போயின. பல மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தேவாலயத்தின் சொத்துக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்கள் தீயில் கருகின. இந்த சம்பவம் மெல்பேர்ன் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் ஏற்பட்ட மின்கசிவு தான் தீ விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக யார்ச் பகுதி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.