மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள துறைமுக நகரமான Fremantle பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த MPV எவரெஸ்ட் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் கப்பலில் இருந்த பணியாளர்கள் உட்பட 109 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என ஆஸ்திரேலிய அன்டார்டிக் டிவிஷன் தெரிவித்துள்ளது.
டச்சு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்தக் கப்பலின் போர்ட் என்ஜின் ரூம் நீரில் மூழ்க வைக்கப்பட்டது. தீ பரவியதில் இரண்டு ரப்பர் படகுகள் முழுவதும் எரிந்து சேதமானது.
அன்டார்டிகாவில் இரண்டு மாத பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், தற்போது மாற்று என்ஜின் ரூம் மூலமாக கப்பலை இயக்கி அருகில் உள்ள துறைமுகத்திற்கு செல்லவுள்ளதாகவும் MPV எவரெஸ்ட் கப்பலின் கேப்டன் Charlton Clark கூறியுள்ளார். Fremantle துறைமுக நகரத்தில் இருந்து 1400 நாட்டிகல் மைல் தொலைவில் இருப்பதாகவும், சரியான வானிலைச் சூழல் அமையும் பட்சத்தில் 5 முதல் 7 நாட்களில் சென்றடைந்துவிடுவோம் என்றும் க்ளார்க் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விபத்துக்குள்ளான எம்பிவி எவரெஸ்ட் கப்பலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஆஸ்ரேலிய கடல்வழி பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. கப்பலில் உள்ளவர்களின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு தற்போதயை சூழலை விளக்கி பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாகவும், பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.