ஆஸ்திரேலியாவின் வடக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் இடம் ப்ரூம். இங்குள்ள பாதுகாக்கப்படும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள பச்சை ஆமைகள் இறந்துபோன நிலையில் கரை ஒதுங்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இறந்துபோன ஆமைகளை வைத்து ஆய்வு செய்ததில், அது பெரும்பாலும் பெண் ஆமைகள் என்று தெரியவந்துள்ளது.
பெண் ஆமைகளை கொன்று, அதனுள் சினைக்கு இருந்த முட்டைகள் எடுக்கப்பட்டு பிறகு கடலில் தூக்கிவிசப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். ஆமைகளை கொன்று அதனுடைய முட்டைகளை சாப்பிடும் வழக்கம் இந்தோனேஷியர்களிடம் இருப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவில் கடற்பரப்பில் வேற்று நாட்டவர் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய கடற்பரப்புகுள் வரும் இந்தோனேஷிய மீனவர்கள், தங்களுடைய பசிக்கு இந்த ஆமைகளை கொல்வது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் படி, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆஸ்திரேலியக் கடல் எல்லைக்குள் மற்ற நாட்டின் படகுகள் சட்டவிரோதமாக நுழைவது அதிகரித்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாகவே ஆமைகள் கொல்லப்படுவதை ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.