குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தொற்றுப்பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதாகவும், இது வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமை சுகாதார அதிகாரி John Gerrard கூறியுள்ளார்.
மகாகாணத்தில் ஒரே நாளில் 20 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். 502 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 26 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் செயற்கை சுவாசம் பெற்று வருவதாக சுகதாரத்துறை அறிவித்துள்ளது.
உயிரிழந்த ஒரு நபர் 70 வயதான ஆண் என்றும், இணை நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா பாதிப்பபால் உயிரிழந்தாக குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath தெரிவித்துள்ளார்.
தொற்று பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், தனியார் மையங்கள் மூலமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக Yvette D’Ath கூறியுள்ளார். இதனால் சரியான எண்ணிக்கையில் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Yvette D’Ath குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான சமூகங்களில் அறிகுறிகள் தென்படுவோர் பரிசோதனை மேற்கொள்ளாமல் இருந்து வருவதாகவும், பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் வரும் பட்சத்தில் அதனை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் 12 குழந்தைகள் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிகுறிகளுடன் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் படுக்கைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். இதன் காரணமாக குறைவான அறிகுறிகள் உள்ள, தொற்று பாதித்தோர் உடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தலைமை சுகாதார அதிகாரி John Gerrard கேட்டுக்கொண்டுள்ளார்.
Link Source: https://ab.co/33r6H8R