தலைமைச் செயலகத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் இதனை தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. இரண்டாவது அலையின் கடுமையான பாதிப்பில் அரசோடு தோள் நின்று உதவி செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள், உயிர் காக்கும் மருந்துகளின் விவரங்களை வழங்குதல் மற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இது போன்ற பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வார் ரூம் எனப் படும் கட்டளை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதனை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்வது, படுக்கை பற்றாக்குறையை போக்க கூடுதல் மருத்துவமனைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்திலேயே தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இதற்காக அரசுடன் இணைந்து பணியாற்ற தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையாமல் ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 297 பேர் புதிதாக தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Link Source: https://bit.ly/3v98zfi