நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என தாலிபான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 21-ம் தேதி ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பாக்திக்கா மற்றும் கோஸ்ட் என்ற நகரங்களுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரி 1000-க்கும் மேற்பட்டோ உயிரிழந்துவிட்டதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் தெரிவித்துள்ளார். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. சுமார் 500 கி.மீ சுற்றளவுக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் பாகிஸ்தானின் சில நகரங்கள் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் தாலிபானின் முதன்மை தலைவர் ஹைபத்துல்லா அக்குந்தாஸ்தா உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை காயமடைந்தோரின் எண்ணிக்கை 1500-யை கடந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆப்கான் மதிப்பில் ஒரு லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என ஆப்கன் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.